search icon
என் மலர்tooltip icon
    • மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பர வீடியோ வைரலாகியுள்ளது.
    • தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கை அமலில் உள்ளது.

    தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்மொழி கொள்கையின் மூலம் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்நிலையில் தெற்கு Vs வடக்கு மொழி பிரச்சனையை மையப்படுத்தி கேட்பரி டைரி மில்க் சாக்லேட் நிறுவனம் இந்தியில் வெளியிட்டுள்ள விளம்பர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    அந்த விளம்பரத்தில், இந்தி பேசும் பெண்கள் மொட்டைமாடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களது பக்கத்து வீட்டில் குடியேறியுள்ள சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் அவர்களுடன் இணைகிறார். அப்போது அந்த பெண்கள் இந்தியில் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் பெண் திணறுகிறார். இதனை உணர்ந்த ஒரு இந்தி பேசும் பெண் தனது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி உரையாடுகிறாள்.

    மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த விளம்பரம் வெளியாகி வைரலாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. 1967 இல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணாதுரை, 1968 ஆம் ஆண்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளை மட்டுமே அரசுப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கும் இரு மொழிக் கொள்கையை அமல்படுத்தினார்.

    • ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், டிஎஸ் குரூப் உடன் சேர்ந்து கையகப்படுத்தியுள்ளது.
    • மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது.

    ஆதார் பூனவாலாவின் சனோடி பிராப்பர்ட்டிஸ் மற்றும் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தன. இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் (டிஎஸ் குரூப்) அகியவை கையகப்படுத்தியுள்ளன.

    4500 கோடி ரூபாய்க்கு ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது. இது ஒழுங்குமுறையின் ஒப்புதலை பொறுத்து நடைமுறைப் படுத்தப்படும்.

    மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பல்வேறு பிரிவில் 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது. மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செலிகா டெவலப்பர்ஸ் மற்றும் ஜகுவார் அட்வைசரி சர்வீசஸ் ஆகியவற்றையும் ராம்தேவ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.

    • நாட் ஸ்கைவர், மேத்யூஸ் ஆகியோர் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • கேப்டன் கவுர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதி டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி மும்பை அணி தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். பாட்டியா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட், மேத்யூஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.

    இருவரும் குஜராத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இருவரும் 77 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் களம் புகுந்த கேப்டன் கவுர் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது.

    • செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.
    • மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதன்மூலம், டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.

    இதுதொடர்பாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை," டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. சத்தீஸ்கர், டெல்லியில் நடைபெற்றதைவிட தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியாக இருக்கும்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலத்தில் பூதாகரமாக மாறும். செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.

    மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மார்ச் 15-ந்தேதி இந்தி தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • நாட்டின் பெரும்பாலான இடங்களில் 15-ந்தேதி ஹோலி பண்டிகை நடைபெறும் என்பதால் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடிவு.

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 15-ந்தேதி இந்தி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு இடங்களில் வருகிற 14-ந்தேதி ஹோலி பண்டியை கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது அல்லது 14-ந்தேதி ஹோலி பண்டியை 15-ந்தேதி வரை நீடிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஹோலி பண்டிகையால் தேர்வு எழுத முடியாத மாணவ-மாணவிகளுக்கு மறுவாய்ப்பு வழக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்தது. இதனால் மறுவாய்ப்பு வழங்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    சிபிஎஸ்இ கொள்கையின்படி, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக சிறப்புத் தேர்வு நடத்தப்படும்போது, ஹோலி பண்டிகையின்போது தேர்வை தவறவிடும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டெண்டரில் KYC, DD தரவுகள் ஒத்துப்போகவில்லை. பார் உரிமங்கள் பெறுவதற்கான டெண்டரில் GST, PAN நம்பர் இல்லை.

    டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.

    பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாட்டிலுக்கு எம்ஆர்பி தொகையைவிட ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மதுபாட்டில்களை குடோனுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மது ஆலை நிறுவனங்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ரூ.1000 கோடி முறைகேட்டில் மதுவுக்கான பாட்டில்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு முக்கிய பங்கு.

    ஏலத்தில் காலக்கெடு முடிவதற்குள் டிடி வழங்காமலே சலுகை வழங்கியதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை ஊதிப்பெருக்கி காண்பித்து, ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை.
    • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்கிறார்.

    குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அதிக வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.

    தற்போது டொனால்டு டிரம்பின் பார்வை மதுபானங்கள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் இறக்குமதிக்கு டிரம்ப் அதிக விரி விதித்துள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்ஸ், ஷாம்பெயின், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு சிறப்பானதாக இருக்கும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனால் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் மதுபானம் விசயத்தில் வர்த்த போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

    • மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
    • 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

    தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.

    ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.

    அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.

    மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

    தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.
    • நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெண்டுர்தி எனும் பகுதியை சந்திர நாராயணன். இவரது வீட்டில் உள்ள ஏசியில் பாம்பு இருப்பதாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அனுப்பினர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் ஏசிக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்தார். பின்னர் அந்த பாம்புகளை பத்திரமாக மீட்டு பைக்குள் போட்டு எடுத்து சென்றனர். நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏசியின் மேல் இருக்கும் மூடியை ஒருவர் கழற்றி அதிலிருந்து கயிறு போன்ற ஏதோ ஒன்றை எடுக்கிறார். கொஞ்சம் உற்று பார்த்த பிறகுதான் தெரிகிறது அது பாம்பு என்று. ஒரு பாம்பு அல்ல, கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.

    இதை பார்த்த பலர் தங்கள் வீடுகளிலும் ஏசி இருப்பதாகவும், இனி அதை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் ஏசி வைத்திருக்கும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார்.
    • நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 121 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. சிறிய தொகுதி என்றால் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய தொகுதிகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார். அவர்களை வரவழைத்து மாவட்ட செயலாளர்களாக நியமித்ததற்கான சான்றிதழை விஜய் நேரில் வழங்கியதுடன், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். இதையடுத்து மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது. இதற்காக மாவட்ட செயலாளர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தயாரித்து வந்தார். அந்த மாவட்ட செயலாளர்களின் விவரங்கள், கட்சியில் அவர் எப்படி செயல்பட்டு வருகிறார், மாவட்டத்தில் அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்தார்.

    பின்னர் மாவட்ட செயலாளர்களின் பட்டியலை கட்சி தலைவர் விஜய்யிடம் வழங்கினார். பின்னர் விஜய்யும், புஸ்சி ஆனந்தும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் பின்னணியை மீண்டும் சரி பார்த்தனர். எவ்வளவு நாள் தங்களுடன் உள்ளனர். மாவட்டத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி பரிசீலனை செய்தனர்.

    இதையடுத்து அவர்களில் 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன், அவர்களை தனித்தனியே நேரில் அழைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பதவிக்கான நியமன சான்றிதழை அவர்களிடம் வழங்கி கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    'நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க செல்வந்தர்கள் பலரும் முயன்றனர். ஆனால் உங்களின் உழைப்பை நம்பி உங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன்.

    எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக இந்த பதவியை பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பண பேரம் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் பெரிய தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். சிறிய தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சபரிநாதன், சேப்பாக்கம் தொகுதிக்கு திலீப்குமார், பல்லாவரம் தொகுதிக்கு குமார், தாம்பரம் தொகுதிக்கு சரத்குமார், திரு.வி.க.நகர் தொகுதிக்கு பல்லவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேலு, மாதவரம் தொகுதிக்கு எம்.எல்.பிரபு ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பல்லவி பெண் மாவட்ட செயலாளர் ஆவார். பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் மன்மதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளுக்கும் இன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட உள்ளனர்.

    ×